districts

img

குடியிருக்க இடம் கேட்டு ஏகோஜி மகாராஜபுரம் மக்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 7 - ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வந்த பட்டியலின மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், சனிக்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை காலை 8 மணிக்கு துவங்கி இரவு, பகலாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு, உறங்கி 2 ஆவது நாளான ஞாயிறன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமம், மேலத்தெருவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய அளவிலான 30 அரசு காலனி வீடுகளில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டு குடும்பமாகவே வசித்து வருகின்றன. தற்போது விவசாயப் பணிகள் அனைத்திலும் இயந்திரப் பயன்பாடு, நூறு நாள் வேலை ஆகியவை தொடர்ச்சியாக இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். 

வசிக்கும் இடமும் தேவைக்கேற்ப இல்லாததால், கடுமையான இடநெருக்கடியில் அங்கேயே வசிக்கும் அப்பகுதி மக்கள், கால மாற்றத்திற்கேற்ப எந்தவொரு வசதிகளையும் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

குடியிருக்க மனையும், பட்டாவும் அரசு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு கோரிக்கை மனுக்களோடு தொடர்ந்து அலைந்து சோர்ந்து போன மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சனிக்கிழமை போராட்டத்தை துவக்கினர்.

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் 60 குடும்பங்களை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கங்களின் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டக் களத்திலேயே சமைத்து சாப்பிட்டு, அங்கேயே உறங்கி 2 ஆவது நாளான ஞாயிறன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஞாயிறு பிற்பகலில் மழை பெய்யத் துவங்கியது. மழையை பொருட்படுத்தாமல், மழையிலும் போராட்டம் நடைபெற்று தொடர்கிறது.

மக்களின் நியாயமான போராட்டத்தை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். எத்தனை நாட்களானாலும் கோரிக்கைகளை நிறைவேற்றி, இடத்தை பிரித்துத் தந்தால்தான் எங்களின் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

போராட்டம் குறித்து ஏகோஜி மகாராஜபுரம், மேலத்தெரு கிராம பொறுப்பாளர் கலியன், சேட்டு ஆகியோர் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கட்சி எங்களோடு இருப்பதால் நம்பிக்கையோடு இருக்கிறோம். நிச்சயம் எங்களின் கோரிக்கைகள் வெல்லும். செங்கொடிதான் எங்களின் நம்பிக்கை என்றனர் நெகிழ்ச்சியுடன்.